களஞ்சியப் பகுதி 44

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— ராசா: ராணி விதவையா?—இல்லை—இல்லவே இல்லை! ராணி விதவையில்லை. அந்த வைர நிலவுக்குக் களங்கம் கற்பித்து என் வாழ்க்கையிலே மண்ணைத் தூவாதே பாபு! பாபு: உம்...ராணி முகராத முல்லை—கரம் படாத ரோஜா! அவளுக்கு நீயே ராஜா—என்றெல்லாம் வர்ண ஜால வார்த்தைகளைக் கொட்டி பொன்னான உன்னுடைய எதிர்காலத்தை நச்சுப்பொய்கையாக மாற்றிவிட வேண்டும் என்ற நாச எண்ணம் எனக்குக் கிடையாது நண்பனே! தேவரும், மூவரும் அறியச் சொல்கிறேன். தீயின் நாக்குகளை தேன் மலரின் செவ்விதழ்கள் என்று எண்ணி ஏமாறாதே! “உம்...என்னடா; ஏதோ நாடகத்திலே பேசிய வசனங்களைத் திருப்பி ஒப்புவிக்கிறானே யென்றும் கருதாதே! தோழமை உணர்ச்சியிலே ஊற்றெடுத்து வெளிக் கிளம்பும் உண்மைகளப்பா இவைகள்...!” ராஜா: போதும் பாபு, போதும்! தென்றலிலே திரிந்துகொண்டிருக்கும் எங்கள் தித்திப்பான நினைவுகளை அழித்துவிடாதே பாபு! பாபு: எனக்கென்ன...எப்படியோ போ...! அவள் ஒரு கைம் பெண்—கசங்கிய மலர் என்கிறேன். கருவண்டின் காதிலே என் குரல் விழாவிட்டால், அதற்கு நான் என்னப்பா செய்ய முடியும்? ராசா: பாபு! ராணி விதவையாகத்தான் இருக்கட்டுமே, அதனால் என்ன? பொன் மணியும் பூக்கொத்தும் போய்விடலாம், என் கண்மணியின் இளமைதனை—இருதயத்தை—விதவைக் கோலம் விழுங்கியதுண்டோ? பாபு: அப்படியானால் உன் மனம்? ராஜா: மறுமணத்திற்குச் சம்மதிக்கிறது, பாபு! ஆமாம், மறுமணத்திற்குச் சம்மதிக்கிறது...! பாபு: ஆ!...பேஷ், பேஷ்!...உன் உறுதியைப் பாராட்டுகிறேன் தோழனே! ஆனால் ஒன்று, அந்த ராணியின்மீது எனக்கென்ன தெரியுமா கோபம்? அவள் விதவை என்பதை உன்னிடம் இத்தனை நாள் சொல்லாமலே மறைத்திருக்கிறாளே!—அப்படியானால் அவள் எவ்வளவு பெரிய வித்தாரக்கள்ளியாக இருக்க வேண்டும்...! ராசா: ஆமாம்—ஆனால் பாபு, அவள் உண்மையில் விதவையாக இருந்தால்தானே என்னிடம் முன் கூட்டியே சொல்லியிருப்பாள்...! பாபு: சரிதான்! வேதாளம் மறுபடியும் முருக்க மரம் ஏறிய கதைதான் உன்கதை...உம், ராஜா! எனக்கேன் வீண் வம்பு? நீயே அந்தப் பசப்புக்காரி ராணியிடம் கேள்... அப்போது தெரிந்துவிடும் அந்தப் பத்தினியின் பகல்வேஷம் எல்லாம்! ராஜா: பாபு நிதானமாகப் பேசு! எனக்கும் உனக்கும் மீண்டும் ஏற்பட்டிருக்கிற நட்பு மாண்டுபோகாமலிருக்க— வேண்டு மென்றால் இதுபோன்ற கலகத் தம்புறாக்களை மீட்டிக் கொண்டிருக்காதே!