பொருளடக்கம்சிலப்பதிகாரம்

காட்சி 33 / 38

காட்சி-33

கணவன் கள்வனா?

குரவைக் கூத்து

மூல ஸ்கேன் 80

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[கூத்தின் முடிவில் ஐயை, ஒரு சோக கீதத்தை வேதனை அசைவுகளோடும் உச்சக் குரலில் பாடியும், அபிநயம் பிடித்து முடிக்கின்ற கட்டம்! பக்கத்தில் தோழிகளும் வான் நோக்கி முகத்தையும் கையையும் உயர்த்தி, சோக அபிநயம் காட்டுதல். கண்ணகி, அந்தச் சோகக் கட்டத்தில் தன்னை மறந்து மூழ்கி விடுகிறாள். அப்போது மாதரி ஓடி வருகிறாள்!]

மாதரி : [அலறியவாறு] கண்ணகி! கண்ணகி!

கண் : [திடுக்கிட்டு] ஆ!

மாதரி : சிலம்பு கவர்ந்த கள்வனென்று குற்றம் சாட்டிக் கோவலனைக் கொன்று விட்டார்களாம், அம்மா!

கண் : ஆ!

[என அலறி விழுகிறாள். அனைவரும் ஓடிவந்து கண்ணகி! கண்ணகி! எனச் சூழ்தல்! குப்புற வீழ்ந்த கண்ணகி, கண் விழிக்கிறாள். கண்களிலேயிருந்து அருவி யென நீர் பெருக்கெடுக்கிறது! உணர்ச்சிகளே அற்றுப் போன வெற்றுடம்பு மெல்ல எழுகிறது. கண்கள் ஏதோ நினைவில் பெயர்க்க முடியாதபடி பதிந்திருக்கின்றன!]

[நினைவுத் திரையில் பழைய காட்சி]

கோவ : நான் போய் வரவா, கண்ணே!

[உணர்ச்சிகள் புத்துயிர் பெறுகின்றன! கண்ணகியின் இதழ்கள் அசைகின்றன! உரக்க ஒலி எழுப்புகிறாள்]

கண் : போகக் கூடாது! நீங்கள் போகக் கூடாது! போனால் கொன்று விடுவார்கள்!...

[என்ன உளறுகிறோம் என்று தனக்குத் தானே சிந்திக்கிறாள் போலும்]

கண் : கொன்று விட்டார்கள்! கள்வன் என்று குற்றம் சாட்டிக் கொன்றுவிட்டார்கள்! அத்தான், நீங்கள் கள்வனா? கள்வனா? இல்ல! இல்ல! இல்ல!

[என முழங்குகிறாள். உணர்ச்சி, குழுமும் கடலாகிறது. ஓடத் துவங்குகிறாள்! ஓடும் வேகத்தில் பெரிய குத்து விளக்கு குடிசையின் மீது சாய்கிறது. அதை யார் அந்த நேரத்தில் கவனிப்பது? அனைவரும் கண்ணகியைத் தொடர்ந்து ஓடுகிறார்கள். கண்ணகி, கண்ணகி என்று கதறியவாறு! அத்தான், அத்தான் என்று அவள் ஓடுகிறாள். சாய்ந்த குத்து விளக்கிலேயிருந்து தீ பற்றிகிறது குடிசையிலே! குடிசை எரியத் துவங்குகிறது! பல இடங்களில் தீ பரவுகிறது. கண்ணகி ஆவேசமாக ஓடிக்கொண்டே யிருக்கிறாள்.]