காட்சி 28 / 38
காட்சி-28
பொற்கொல்லர் முறையீடு
பாண்டியன் தனிமாடம்
மூல ஸ்கேன் 71
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[நெடுஞ்செழியனும் கோப்பெருந் தேவியும் இருக்கிறார்கள்....] கோப்பெருந்தேவி கேட்டுக்கொண்டே வருகிறாள்.]
கோப் : எங்கே இன்னும் சிலம்பு வரவில்லையா?....இன்னுமா பழுது பார்க்கிறர் பொற்கொல்லர்?
[நெடுஞ்செழியன் ஓலையில் எழுதிக்கொண்டிருக்கிறான்.]
கோப் : ஊகூம்...நான் கேட்டதற்குப் பதில் கூறாமல் அப்படி யென்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம்?
[ஊடல்]
நெடுஞ் : கல்வியின் பெருமை பற்றிப் புறத்துறைப் பாடல் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கோப் : ஆமாம்!....புறப்பாடல்...போர் முழக்கம்! இதைத் தவிர வேறு பேச்சேயில்லை! இது...பள்ளியறை. பள்ளிக்கூடமுமல்ல ...பாசறையுமல்ல...தெரியுமா?
நெடுஞ் : தமிழ்...ஒரு தென்றல்! அது எல்லா இடத்திலும் நுழையும். பாடலைக் கேள்...
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்”...
[அதற்குள் தோழி வந்து...]
தோழி: அரசே; அரண்மனைப் பொற்கொல்லர் தங்களை அவசரமாய்க் காணவேண்டுமாம்!
நெடுஞ் : வரச் சொல்!
[என்று வெளியே செல்லல்...வாயிற் படியில் நின்றவாறு....]
நெடுஞ் : என்ன?
தலைமைப் பொற் : வணக்கம்...மன்னவா!
[நடுங்குகிறார்]
நெடுஞ் : ஏன் நடுங்குகிறீர்? என்ன காரணம்?
தலைமைப் பொற் : மன்னிக்க வேண்டும்...அரசே;...மன்னிக்க வேண்டும்!
நெடுஞ் : செய்தியைச் சொல்லும்... பொற்கொல்லரே!
தலைமைப் பொற் : அரசியாரின் சிலம்பைப் பத்திரமாகத்தான்...பாதுகாப்பான இருப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டித், திறவுகோலையும் நானே வைத்திருந்தேன். இன்று காலை பெட்டியைத் திறந்தால், சிலம்பைக் காணவில்லை அரசே; காணவில்லை!
நெடுஞ் : காணவில்லையா? ம்...காணவில்லை என்ற செய்தியைச் சொல்லவா இங்கு வந்தீர்? பெட்டியில் பூட்டிய சிலம்பு எங்கே போகும்? பொற்கொல்லரே! உமக்கு யார் மீது ஐயப்பாடு?
தலைமைப் பொற் : நான் யாரைச் சொல்லுவேன்? என்னிடம் வேலை பார்க்கும் நூறு கொல்லர்களில் நான் யாரைக் குறிப்பிட்டுச் சொல்வது மன்னவா!
நெடுஞ் : சரி, நூறு கொல்லர்களையும் நாளை நமது நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தும்! நானே விசாரணை செய்து கள்வனைக் கண்டு பிடிக்கிறேன்.
தலைமைப் பொற் : உத்தரவு, மன்னவா! என்னை மன்னிக்கவும்; வருகிறேன்.
நெடுஞ் : ம்!
[பொற்கொல்லர் போகிறார்]