எண்ணிடப்படாத காட்சி
காட்சி,
காட்சி,
மூலம் இதை எண்ணின்றி `காட்சி,` என்றே தலைப்பிட்டு அச்சிட்டுள்ளது (காட்சி 21-க்கும் காட்சி 24-க்கும் இடையில்). காட்சி 22/23 என்று எந்த எண்ணும் வழங்கப்படவில்லை.
மூல ஸ்கேன் 124, 125
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இடம்: ரோடு
(ஒலிபெருக்கி அறிவிப்பு...)
“காங்கிரஸ் ஜனநாயக சோஷலிச மாநாடு... தீவிரத் தியாகி திரவியம் பிள்ளை தலைமையில்... சமதர்ம ஜோதி தசாவதாரம் திறந்து வைப்பார்... தேர்தல் பிரச்சாரத்தை பிரபல பேச்சாளி கண்ணன் தொடங்கி வைப்பார்... ஜனநாயக சோஷலிச மாநாடு... ஊர்வலத்தில் ஆயிரம் பஸ்கள்... ஐநூறு லாரிகள்... இரண்டாயிரம் மோட்டார்கள்... அணிவகுத்து வரும்... காண வாரீர் காங்கிரஸ் சோஷலிச மாநாடு... சோஷலிச மாநாடு...”
(ஒலி நின்றதும்... தசாவதாரம்... கம்பீரமாக அந்தப் பக்கம் வருகிறார்... பின்னால் ஒரு ஆள் காங்கிரஸ் கொடிபிடித்து வருகிறான்... தசாவதாரம் கழுத்தில் மாலையிருக்கிறது...)
தசா:— ஆகா! மகாநாட்டுத் திறப்பாளரை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து விட்டீர்களே... நீங்கமாத்திரம்தான் வந்தீங்களா... வேற ஒருத்தரும் வல்லியா?...
கொடிக்காரர்:— நிறையப்பேரு வந்தாங்க... எல்லாரும்... அந்த சினிமா நடிகையை வரவேற்கப் போய்ட்டாங்க...
தசா:— போகட்டும்... போகட்டும்... தலைவரை வரவேற்கவாவது ஒரு நாலுபேர்...
கொடி:— நாலு பேரு போதுங்களா?...
தசா:— கூட ஒரு ஆள் போங்களேன்...
(எதிரே ஒரு ஆள் மேலே அண்ணாந்துதாவியபடி விடாதே விடாதே என்று ஓடிவந்து, தசாவதாரத்தின்மீது விழுகிறான். அவன் பேர் ராமு.)
தசா:— ஏ, ஏ, என்னப்பா மேல பார்த்துகிட்டே வந்து ஆள்மேல விழுறே?... ஆங்?
ராமு:— ஓட்டல்... தோசை கொண்டாந்து வச்சான்... மேலே பேன் போட்டது தான் தாமதம்... பறக்க ஆரம்பிச்சிட்டுது தோசை... அதைப் பிடிக்கத்தான் ஓடு...
தசா:— கவலைப்படாதே... நம்ப சோஷலிச மாநாடு முடியட்டும்... தோசை யெல்லாம் பறக்காது... அப்புறம் மனுஷன்தான் பறப்பான்; வானவெளிக்கு. ராக்கெட்டில்லி...
(கோவிந்தன், ரேஷன் கார்டுகளைத் தின்றுகொண்டு வருகிறான்.)
தசாவ:— இது என்னப்பா... அட்டையைத் தின்னுகிட்டு?...
கோவி:— அட்டையா இது?... ரேஷன் கார்டுய்யா!... கார்டை கொடுத்துட்டாங்க... அரிசியும் இல்லை... ஒரு மண்ணும் இல்லை; கார்டையாவது தின்போம்னு திங்கிறேன்...
தசா:— ஏ... ஏ... பாவி! எல்லாம் மகாநாட்டுக்கு வாங்கப்பா; சோஷலிசம் வரப்போவுது... அப்புறம் கார்டை திங்க வேண்டியதில்லை.
கோ:— பிறகென்ன எலியைத் திங்கலாமோ?... அதுக்கு அப்புறம் பூனையைத்திங்கச் சொல்லுவே!
தசா:— அடஅசடே!... எலியைத் தின்னா பூனையைத்திங்காம இருக்கலாமோ?... எலிமாத்திரம் வயத்துக்குள்ளே போனா... அங்கபோயி திருட ஆரம்பிச்சிடும்... அதை விரட்டிப் பிடிக்கப் பூனையை அனுப்ப வேண்டாமோ?... எலியைவிரட்டப் பூனை... பூனையை விரட்ட நாய்... நாயை விரட்ட மனுஷன்... சரி... சரி... வாங்க எல்லாம் மகாநாட்டுக்கு... வாங்க... வாங்க...
(பரதேசியைத் தரகன் இழுத்துப் போதல்)
தசாவ:— ஏ, ஏ, எங்கப்பா அந்த பரதேசிக்கிழவனை இழுத்துக்கிட்டு போறே...
தரகன்:— சும்மா இல்லை... முப்பது ரூபா கொடுத்திருக்கிறேன்... குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனுக்காக...
தசா:— ஆகா, அறுபது வயதுப் பரதேசி... குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்கிறான்... எல்லோரும் வாருங்கள் மகாநாட்டுக்கு, இந்தக் கண்காட்சியை மக்கள் பார்க்கட்டும்... காங்கிரஸ் சோஷலிசத்தின் குடும்பக் கட்டுப்பாடு படி அமுலாகிறது பார்த்தீர்களா?...
(ஓடிவந்து...)
கிருஷ்ணன்:— அமுல்! அமுல்! அமுல் எங்கே கிடைக்கிறது... குழந்தை உணவு அமுல் எங்கே கிடைக்கிறது... சொல்லுங்கள்...
தசா:— ஆங்... எங்க மகாநாட்டிலே கிடைக்குது... எல்லாரும் வாங்க... பரவாயில்லை; கூட்டம் ஒருமாதிரி சேர்ந்து போச்சு!
(போகிறார்கள்)
(திரை)