காட்சி 7 / 21
காட்சி 7.
காட்சி 7.
மூல ஸ்கேன் 94, 95, 96, 97, 98
கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.
[மரகதமும் மாலாவும் காவேரி வீட்டிற்கு வருகின்றனர்—இந்தி எதிர்ப்புப் போரில் துரைத்தனத்தின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான கொள்கைச் சிங்கத்தின் மனைவிதான் காவேரி]
மரகதம்: (மாலாவிடம்) இதோ; படமாகி விட்டவர்தான் தமிழ் காக்கும் அறப்போரில் பிணமாகிப் போனவர்... உயிர் பிரியும் தருவாயிலும் “உலகத்தோடு பிறந்த தமிழ் வாழ்க!” என்று கூவிடத் தவறவில்லை இந்தக் கொள்கைச் சிங்கம்.
(கும்பிடுகிறாள். மாலாவும் கும்பிடுகிறாள்)
மாலா: (மெதுவாக) மரகதம்!... காவேரியம்மா எங்கே?......
மரகதம்: இரு......வருவார்கள்...... (உள் நோக்கி) அம்மா! அம்மா!!
(இருவரும் காவேரி வருகையை எதிர் பார்த்து நிற்கிறார்கள் ...)
(வீரத்தாய் பற்றிய சோக கீதம் பின்னணியில் கேட்கிறது. காவேரியம்மா வருகிறார்கள்)
மரகதம்: வணக்கம்மா...
காவேரி: வணக்கம், வாம்மா...
மரகதம்: இவ...மாலா......என் கல்லூரித் தோழி......
(மாலா வணங்குதல், காலில் விழுதல்......)
காவேரி: எழுந்திரம்மா...என் காலில் விழுவதா?...நான் எவ்வளவோ பாபம் செய்தவள்......
மாலா: பாபமா?...
காவேரி: ஆமாம்...இதோ பார்; நான் புண்ணியம் பண்ணியிருந்தா அவருக்கு முன்னேயல்லவா போயிருப்பேன்......
மரகதம்: என்னம்மா; கவலைப்பட ஆரம்பிச்சுட்டீங்களா?......
காவேரி: இல்லை மரகதம்...நான் எப்படிக் கவலைப்பட முடியும்? கண்ணீரும் வற்றி விட்டது...உள்ளமும் மரத்துப் போய் விட்டது......தமிழ் காத்த வீரமறவர் வரிசையிலே புகழ்க்கிரீடம் அணிந்து கொண்டு அவர் புன்னகை புரிகிறார். அவரை நினைத்து நினைத்து நான் பெருமைப்படுகிறேன்...
மரகதம்: அம்மா! உங்கள் கணவர் அணிந்திருக்கும் புகழ்க் கிரீடத்துக்கான பொன்னை; உங்கள் தாலியிலிருந்தல்லவா தந்திருக்கிறீர்கள்... நீங்கள் குடியிருந்த முல்லை மொட்டுக்களையல்லவா, அந்தக் கிரீடத்தின் முத்துக்களாகப் பதித்திருக்கிறீர்கள். அந்த மகுடத்தில் மின்னும் ரத்தினம்; தாயே உங்கள் குங்குமப் பொட்டல்லவா?...
காவேரி: மரகதம்! உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் வடிக்கின்ற அனுதாபக் கண்ணீர்; அடக்குமுறை வெறியர்களை அழிக்கின்ற கண்ணீராக மாறட்டும். நானிழந்த மஞ்சளும் குங்குமமும்... மமதை கொண்டலையும் தமிழ்ப் பகைவர்களின் நெஞ்சழுத்தத்தைச் சுட்டுப் பொசுக்கட்டும்......
மரகதம்: அம்மா!... அது நடந்தே தீரும்! அரசு அன்றுகொல்லும். தெய்வம் நின்று கொல்லும். தெய்வம் யாரம்மா?...தெய்வம் அழுது கொண்டிருக்கும் ஏழைமக்களின் எரிமலை உள்ளந்தானம்மா; அழிவுக் கடவுள்!...அவர்கள் சிரிப்புத்தானம்மா ஆக்கக் கடவுள்!...அவர்களின் கடமையுணர்வு தானம்மா காக்கும் கடவுள்!... இதை உணராத உன்மத்தர்களுக்கு உடனடியாகப் பாடங் கற்பிக்க உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கவே இப்போது வந்தேன்.
காவேரி: என்ன மரகதம்?
மரகதம்: தங்களை இந்தக் கோலத்திற்கு ஆளாக்கியவர்களுக்கு அறிவு புகட்ட... அடுத்து வருகிற தேர்தலில்...ஜனநாயக நெறியில்...வெற்றி காணவேண்டும்......
காவேரி: அதற்கு?...
மரகதம்: இந்தத் தொகுதியில் தாங்கள் போட்டியிட வேண்டும்;
காவேரி: என்ன....தேர்தலா?...
மரகதம்: ஆமாம் ... தமிழ் காக்கும் மானப்படை மறவர் முகாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாங்கள் போட்டியிட வேண்டும்......
காவேரி: மரகதம் ?
மரகதம்: எங்கள் மாணவர் உலகம் உங்கள் பின்னால்! ... ...இரக்கமுள்ள இதயங்கள் அத்தனையும் உங்களை ஆதரிக்கும்! இந்தி எதிர்ப்பின் சின்னம் அம்மா தங்களின் வெற்றி! தயங்காமல் ஒத்துக் கொள்ளுங்கள் ...
(கெஞ்சுகிறாள்)
காவேரி: வேடிக்கையான பெண்... இந்தத் தொகுதியில் ஆளுங் கட்சியின் சார்பாக உங்க அப்பா நிற்கப் போகிறார். அவருக்கு நான் போட்டியா?...
மரகதம்: எங்கள் அப்பாவை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டேனே; எத்தனை லட்சம் செலவழித்தாலும் இந்தத் தடவை கட்டிய முன்பணம் வராது என்று!
அம்மா! உங்களை நான் ஒத்துக்கொள்ளச் சொல்வது; பதவியில் அமர வேண்டும் என்பதற்காக அல்ல தமிழை அழிக்க வரும் ஆபத்தைத் தமிழகம் முழு மூச்சோடு எதிர்க்கிறது என்பதை உலகத்திற்கு உணர்த்துவதற்காக!....
காவேரி: இப்போது நான் உன் கோரிக்கைக்கு இணங்க வேண்டும் இல்லையா?....
மரகதம்: ஆமாம்....
காவேரி: அதற்கொரு நிபந்தனையிருக்கிறது; அதை முதலில் நிறைவேற்று....... அதன்பிறகு உன் அன்புக் கட்டளைக்கு நான் கட்டுப் படுகிறேன்...
மரகதம்: என்னம்மா?
காவேரி: என் மகன் கண்ணனைத் தெரியுமல்லவா?...
மரகதம்: நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்....அறிமுகமில்லை....அவர் தீவிரமான காங்கிரஸ் தியாகியாயிற்றே...
காவேரி: இந்தக் குடும்பமே அப்படித்தானேயம்மா; கண்ணனின் அப்பா (படத்திடம் போய்) காந்திமகானின் உப்புச் சத்தியாக் கிரகத்துக்குப் போனவர்... கள்ளுக் கடை மறியல் செய்த போது கர்ப்பவதியாக இருந்த நானும் அவரும் ஒரு வருடம் சிறையில் அடைபட்டோம்...... கண்ணன் பிறந்ததே சிறையில்தான்!
மாலா: ஆயர்பாடிக் கண்ணன் கூட சிறையில் தான் பிறந்தான்...
மரகதம்: அவன் குழலும் கையுமாகத் திரிந்தான்... இந்தக் கண்ணன் கொடியுங்கையுமாக அல்லவா திரிவார்...
காவேரி: இப்போது கையில் கொடியில்லை. காரணம்; கட்சிக் கொடிக்கும் தேசியக் கொடிக்கும் வித்யாசமில்லாமல் செய்து விட்டார்களே என்று! அவனுக்கு வருத்தம்... அதனால் கொடி பிடிப்பதில்லை.
மரகதம்: சரிம்மா; நிபந்தனையென்றீர்களே! என்ன?....
காவேரி: அவன் காங்கிரசை திருத்தப் போகிறேன் என்று கூறிக்கொண்டு ஒரே வெறியாக அலைகிறான்....
மரகதம்: காங்கிரசைத் திருத்துவதா? கடலில் விழுந்து காணாமற்போன பொருளை கையில் விளக்கெடுத்துக் கொண்டு தேடுவதுபோன்ற முயற்சி அல்லவா அது....
காவேரி: அந்த முயற்சியில் இருந்து அவனை மாற்ற வேண்டும்-இடிந்துபோன கட்டிடத்திலிருந்து அவனை வெளியேற்ற வேண்டும்...... திலகர்-காந்தி போன்ற தியாகிகள் வளர்த்த காங்கிரசைத் தீயோர் கையிலிருந்து மீட்பேன்...புடம் போட்ட தங்கமாக்குவேன் என்றெல்லாம் புலம்புகிறான்... பிணமாகி விட்ட அவன் தந்தையால்கூட அவன் பிடிவாதத்தைமாற்ற முடியவில்லை...காங்கிரசை அவனால் மட்டுமல்ல; இனி யாராலும் திருத்த முடியாது என்பதை அவனுக்கு உணர்த்தவேண்டும் அவன் தன்னை உணர்ந்து—தமிழை உணர்ந்து—தாயை உணர்ந்து தமிழ்ப் பகைவர்களை நோக்கித் தடந்தோள் உயர்த்தும் வீரமகனாக விளங்கிடவேண்டும்....அதனைச் செய்ய உன்னால் முடியுமா?...முடியுமென்றால் உடனே செயல்படு...இதுதான் மரகதம் என் நிபந்தனை...
மரகதம்: எனக்கு நம்பிக்கை யிருக்கிறதம்மா! மாற்றாரின் மனத்தை மாற்றுகிற அளவுக்குத் தூய கொள்கைகள் இருக்கும்போது; தங்கள் மகனை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது...
காவேரி: அப்படியானால் வாழ்த்தி அனுப்புகிறேன்...வெற்றியை நோக்கிப் போ... வெறி கொண்டலையும் என் மகனை நெறி கண்டார் வழிக்கு அழைத்து வா......
மரகதம்: சரியம்மா; நான் உங்கள் நிபந்தனையை நிறைவேற்றுகிறேன் ... நான் சொன்னதை நீங்கள்?...
காவேரி: (நழுவிக் கொள்ளுதல்) அதை மறக்க மாட்டாயா? அம் என் கண்ணே; முதலில் கண்ணனைத் திருத்து!
(திரை)