யசோதர காவியம்
The Yasodhara Epic
மு. கருணாநிதி
யசோதர காவியம்
எரிசாராய ஊழல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ராமமூர்த்தி கமிஷன்முன் முன்னாள் ஐ. ஜி. ஆர். என் மாணிக்கம் ஒரு வாக்குமூலம் கொடுத்தார், அதில் அவருடைய உறவினர்கள் இரண்டு பேர் சாராயக் கலவைத் தொழிற்சாலை வைப்பதற்காக எம். ஜி. ஆரிடமும், எம். ஜி. ஆர். அண்ணனிடமும் எம். ஜி. ஆர். அண்ணன் புதல்வர்களிடமும், பொதுவாக எம். ஜி. ஆர். குடும்பத்திடமும் ஏறத்தாழ 11 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அந்தத் தொழிற்சாலை உரிமம் கிடைக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டசபையில் இதைப் பற்றி முதல்வரின் பதில் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டார்கள். முதல்வர் தான் பதில் அளிக்காமல் ஒரு விளக்கத்தை எழுதி அதை முன்னவர் நாவலர் மூலம் அதைப் படிக்க வைத்தார். “இந்த அறிக்கையின்மீது இந்த விளக்கத்தின் மீது—ஒரு நாள் விவாதம் வேண்டும்” என்று கேட்டோம்.
நாவலர் சரி என்று ஒப்புக்கொண்டார்; அதைத் தலைவர் ராஜாராமும் மின்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் ஒப்புக் கொண்டனர்.
இவ்வளவுக்கும் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அமைச்சர்களும் அவைத்தலைவரும் சட்டம் புரியாமல் பதில் சொல்லிவிட்டார்கள். அவர்கள் அளித்த உறுதிமொழி என்னைக் கட்டுப்படுத்தாது. அவர்கள் சொன்னது தவறு என்று கூறிவிட்டார்.
நாவலர், ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த மூன்று பேரும் திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர்களாக இருந்தவர்கள்.
நாம் எவ்வளவு அருமையாக, மரியாதையாக வைத்திருந்தோம். அவர்களுக்கு இப்படிப்பட்ட கதி ஏற்படவேண்டுமா என்று உள்ளபடியே வருத்தப்பட்டேன்.
வேறு யாராகவாவது இருந்தால் உடனே பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருப்பார்கள். எனக்கு அப்பொழுது நான் முன்பெல்லாம் சொல்லிப் பழக்கப்பட்டஒரு கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
‘யசோதர காவியம்’ என்று ஒரு வடபுலத்துக் காவியம். யசோதரன் என்பவன் அவந்தி என்ற ஒரு நாட்டை ஆண்டு கொண்டிருந்த ஓரரசன். அவனுடைய மனைவிக்குப் பெயர் அமிர்தவல்லி அவன் அந்த மன்னனோடு மாளிகை வாசத்தை அனுபவித்தாள். மன்னனோடு இருந்தாலும், மாளிகை வாசம் கிடைத்தாலும்தர்பார் மண்டபம்-தானிட்ட கட்டளையை நிறைவேற்ற தாதியர் பட்டாளம்-இவைகளெல்லாம் இருந்தாலும் கூட அந்த மகாராணிக்கு அந்த அரண்மனையில் உள்ள ஒரு சொறிபிடித்த கூனல் விழுந்த-பாதிக் குருடனை-நோஞ்சானை ஒருயானைப்பாகன் மீதுதான்காதல்
இந்தயானைப் பாகனுக்காகஇரவெல்லாம் காத்திருப்பாள் அவன் தாமதமாக வருவான் வந்தவுடன் கையிலே இருக்கிற சவுக்கால் இந்த மகாராணியைப் பத்து அடி அடிப்பான். அதை அவள் பொறுத்துக் கொள்வாள். அதற்குப் பிறகு இருவரும் சோலையிலே அணைத்து மகிழ்வார்கள். அதிலே மகாராணிக்கு ஒரு சுகம்.
என்னதான் மகாராஜா அன்பாக ஆதரவாக அரண்மனையிலே வைத்து பன்னீர்துளி, பழரச பானம் என்று தந்தாலும் கூட இவைகள் எல்லாம் அந்த மகாராணிக்குப் பிடிப்பதில்லை. யானைப்பாகன் பத்து அடி அடித்து ‘எண்டி நேரங்கழித்து வந்தாய்’ என்று கேட்டு பிறகு அணைத்து தருகிறானே சுகம் அதிலே அவளுக்கு இன்பம்.
அதைப் போலத்தான் இவர்கள் எல்லாம் இங்கே மகாராஜாவிடத்திலே மாளிகையிலே இருந்த நேரத்தில் இருந்த சுகம் போதாமல், எப்படி யானைப்பாகன் தரும் சுகம்தான் சுகம் என்று அரசி கருதினாளோ, அதைப் போல எம். ஜி. ஆர். தருவதுதான் சுகம் — அதற்கு மிஞ்சிய சுகம் கிடையாது என்கிற அளவிற்கு தங்கள் அமிர்தவல்லியாக ஆக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிற நேரத்தில் நான் மெத்தவும் வேதனைப்படுகிறேன்.